நேபாளத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்த பின்னர், புதிய அரசியல் சட்டத்தின் கீழ் திருத்தி அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு இன்று முதலாவது தேர்தல் நடைபெறுகிறது.
இதுவரை ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முதல் முறையாக தேர்தலில் பங்கேற்கின்றனர். 1.76 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.
தேர்தலில், விகிதாச்சார வாக்குப் பதிவு முறையின் கீழ் 6000 பேரும், நேரடி வாக்குப் பதிவு முறையின் கீழ் 4021 பேரும் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 55 கட்சிகள் தேர்தலில் பங்கேற்றுள்ளன. ஆளும் 7 கட்சிக் கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது பல இடங்களில் இடதுசாரியினருக்கும், நேபாள காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல்கள் மூண்டன. இதன் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாளான இன்று அசம்பாவிதம், வன்முறைகள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் பதட்டமான இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை கண்காணிக்க பல்வேறு நாடுகளின் பார்வையாளர்கள் நேபாளில் முகாமிட்டுள்ளனர்.