இட ஒதுக்கீடு தீர்ப்பு எதிரொலி: மாணவர் சேர்க்கை தள்ளிப் போகும்!
டெல்லி: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான பட்டியலை வெளியிடுவது தாமதமாகும் எனத் தெரிகிறது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் சட்டத் திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பட்டியல் வெளியிடுவது தாமதமாகும் எனத் தெரிகிறது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதலே நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களையும் மாணவர் சேர்க்கைப் பட்டியலில் சேர்க்க வேண்டிய கட்டாயம் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தின் இயக்குநர் சாமர் பரூவா கூறுகையில், மாணவர் சேர்க்கைக்கான பட்டியலை வெளியிடுவது சில நாட்கள் தள்ளிப் போகும். மாணவர் சேர்க்கை ஏற்கனவே முடிந்து விட்டது. இருப்பினும் பட்டியலை இறுதி செய்வது தள்ளிப் போகும்.
ஏப்ரல் 11ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான பட்டியலை வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் இது தள்ளிப் போகும். அனைத்து ஐஐஎம் நிறுவனங்களும் இணைந்து இதுகுறித்து பேசி மாணவர் சேர்க்கை இறுதி செய்யும் என்றார்.
அமல்படுத்துவது சிரமம் - சென்னை ஐஐடி இயக்குநர்:
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் கூறுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுடனும், பிற ஐஐடி நிறுவன இயக்குநர்களுடன் பேசி முடிவு செய்யப்படும்.
இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது மிகக் கடினம். காரணம் கூடுதல் மாணவர்களை சமாளிக்கும் வகையில் போதிய ஆசிரியர்கள் இல்லை.
வீரப்பமொய்லி கமிட்டி பரிந்துரைத்துள்ளபடி நடக்க வாய்ப்புள்ளது. அதன்படி இந்த ஆண்டு 9 சதவீத இட ஒதுக்கீட்டையும், அடுத்த ஆண்டு 18 சதவீத இட ஒதுக்கீட்டையும், 3வது ஆண்டில் முழுமையாக 27 சதவீத இட ஒதுக்கீட்ைடயும் அமல்படுத்துவது குறித்து யோசிக்கப்படும்.
இதன் மூலம் படிப்படியாக அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ளவும், போதுமான ஆசிரியர்களைத் திரட்டிக் கொள்ளவும், நிதியாதாரம் உள்ளிட்டவற்றைப் பெருக்கிக் கொள்ளவும் வசதியாக இருக்கும் என்றார்












Click it and Unblock the Notifications