விலையை கட்டுப்படுத்த சிமெண்ட் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
டெல்லி: சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் சிமெண்ட் ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
உணவு, பெட்ரோல் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 7.41 சதவீதமாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலையும் சகட்டு மேனிக்கு உயர்ந்ததில் கட்டுமான தொழிலும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சிமெண்ட் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் மத்திய அரசு இதில் கவனம் செலுத்தியுள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கூறியதாவது,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்தவும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளி நாடுகளுக்கு சிமெண்ட் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.
இதன்மூலம் உள்நாட்டு உற்பத்தியும் தேவையும் சம அளவில் இருக்கும். சிமெண்ட் விலை உயர்வும் தடுக்கப்படும். சிமெண்ட், இரும்பு ஏற்றுமதிக்கு வழங்கப்படும் மானிய உதவிகளும் நிறுத்தப்படும். இதற்கான அறிவிக்கையை வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் பிறப்பித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications