கிராம மக்களால் ஓட ஓட விரட்டி 2 பேர் அடித்துக் கொலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம மக்களுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்த இருவரை கிராம மக்கள் அடித்து கொன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள மேல்சிருவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவர் மீது 20க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவரது தம்பி கமலக்கண்ணன்.
இருவரும் சேர்ந்து ஊரில் பல அட்டகாசங்களைச் செய்து வந்துள்ளனர். கந்து வட்டிதான் இவர்களின் பிரதான தொழிலாகும். கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தாமதமானால் அவர்களை அடித்து உதைப்பது, கரும்புத் தோட்டம் உள்ளிட்டவற்றை தீவைத்துக் கொளுத்துவது என அட்டகாசம் புரிந்து வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை மறித்து இருவரும் வேலி போட்டனர். இதைத் தட்டிக் கேட்டவர்களை இருவரும் அடித்து உதைத்துள்ளனர்.
இதனால் கிராம மக்கள் பொங்கி எழுந்தனர். இனியும் பொறுமை காக்கக் கூடாது என்று கொதிப்புடன் கையில் கிடைத்த ஆயுதங்களுடன இருவரையும் ஓட ஓட விரட்டினர். கம்பி, கத்தியால், வெள்ளையனையும், கமலக்கண்ணனனையும் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்களது வீடும் தாக்குதலுக்கு ஆளானது, மனைவி, மகன் ஆகியோரையும் ஊர் மக்கள் தாக்கினர்.
வெள்ளையனுக்குச் சொந்தமான அரிசி ஆலையும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது.
கிராம மக்களின் ஆவேசத் தாக்குதலில் வெள்ளையனும், கமலக்கண்ணனும் படுகாயமடைந்தனர். அப்படியும் விடாமல் இருவரையும் கிராம மக்கள் ஆத்திரம் தீர அடித்துள்ளனர். இதில் வெள்ளையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குத்துயிரும், குலையுயிருமாக இருந்த கமலக்கண்ணன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
ஊரே கூடி இருவரை அடித்துக் கொன்ற தகவலால் அக்கம் பக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். மாவட்ட எஸ்.பி.யும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து மேல் சிறுவள்ளூர் கிராமத்தைச் ேசர்ந்த ஆண்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications