தம்பிராஜாவுக்கு போலீஸ் குறி-சிக்கிய 465 பிற ரெளடிகள்
சென்னை: சென்னையி்ல் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் காரில் சுற்றி வரும் ரெளடி ரவுடி தம்பிராஜாவைப் பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளனர். இவனைப் பிடிக்க நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 465 பிற ரெளடிகள் சிக்கினர்.
சென்னை அயனாவரத்தில் பதுங்கியிருந்த பயங்கர ரெளடிகளான தூத்துக்குடி ஜெயக்குமார், சுடலை மணி ஆகியோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனால், ரெளடி ஜெயக்குமாரின் கூட்டாளியான தம்பிராஜா தப்பிவிட்டான். ஜெயக்குமாரை போலவே தம்பிராஜாவும் வெடி குண்டுகளையும், துப்பாக்கிகளையும் கையாளும் பயங்கர நபராவான்.
தூத்துக்குடி மட்டக்கடையைச் சேர்ந்த இவன் மீது பல கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை பொருள் கடத்தல் வழக்குகள் உள்ளன.
பிரபல ரெளடியான வெள்ளை ரவியின் கூட்டாளி சபியுல்லாவை துப்பாக்கியால் சுட்டு, அவனது காதலி சானியாவை கடத்திய வழக்கில் இவனை பேசின்பிரிட்ஜ் போலீஸார் தனியே தேடி வருகின்றனர்.
இப்போது இவனது குரு ஜெயக்குமார் கொல்லப்பட்ட நிலையில் இவனை எப்படியும் பிடித்துவிட உதவி கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படைகள் களத்தில் இறங்கியுள்ளன.
இவன் சிவப்பு நிற மாருதி காரில் சென்னை நகரில் சுற்றி வருவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அவனிடம் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், கைத்துப்பாக்கியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிகார், உத்தரப் பிரதேசத்தில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து தமிழகத்தில் பல ரெளடிகளுக்கு இவன் சப்ளை செய்துள்ளான்.
எனவே தம்பிராஜாவை மிகவும் கவனாகப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்பிராஜாவை தேடும் பணியில் சென்னையில் இரவில் நடந்த வேட்டையில் 465 பிற ரவுடிகள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து தம்பியைத் தேடும் பணி நடக்கிறது.
போலீசாரிடம் இருந்து தப்பி்க்க முயன்றால் இவனுக்கும் என்கெளண்டர் உறுதி என்று தெரிகிறது.
இதற்கிடையே தம்பிராஜா புதுச்சேரியில் பதுங்கியுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளதால் அங்கும் ஒரு தனிப்படை விரைந்துள்ளது.