விலைவாசி: நாடாளுமன்றம் நோக்கி இடதுசாரி எம்.பிக்கள் பேரணி
கொல்கத்தாவில் நேற்று பணவீக்கமும், பொருளாதாரம் மீதான அதன் தாக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி பேசுகையில், நாட்டில் தற்போது மிகவும் முக்கியப் பிரச்சினை விலைவாசி உயர்வுதான்.
வருகிற லோக்சபா பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கப் போகிறது. கழுத்தின் மீது ஏறி அமர்ந்திருக்கிற கொக்கு போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பெரும் ஆபத்தாக மாறியிருக்கிறது விலைவாசி உயர்வு
எனவே ஒரு கூட்டணிக் கட்சியாக நாங்கள் காங்கிரஸுக்கு கூற விரும்பும் அறிவுரை, விலைவாசி உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் தேர்தலின்போது இது உங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
விலைவாசி உயர்வைக் குறைக்கக் கோரி இடதுசாரி எம்.பிக்கள் இணைந்து நாடாளுமன்றம் நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப் போகிறோம். எங்களை போலீஸார் தாராளமாக கைது செய்யலாம். எங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. விலைவாசியைக் குறைக்க, தேசிய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் நாங்கள் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதி இது.
ஏப்ரல் 16ம் தேதி முதல் 23ம் தேதி இடதுசாரிகளும், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியும் இணைந்து தேசிய அளவில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தும்.
விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி நாங்கள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டால் உடனடியாக பாஜக ஆட்சிக்கு வரலாம். அவர்களும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கையைத்தான் பின்பற்றுவார்கள். பொருளாதார விவகாரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸும், பாஜகவும் ஒரே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன என்றார் எச்சூரி.
நாடாளுமன்றம் சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வுப் பிரச்சினையை பெரிதாக்க இடதுசாரிகளும், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன. குறிப்பாக பாஜகவினர், நாடாளுமன்றத்தை முடக்கப் போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.