விலைவாசி: எதிர்க்கட்சியினர் அமளி - லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்ட தொடர், 25 நாள் இடைவெளிக்குப் பின்னர் இன்று காலை தொடங்கியது. லோக்சபா கூடியதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர், இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.பிக்கள் விலைவாசி உயர்வுப் பிரச்சினை குறித்து பிரச்சினை கிளப்பினர்.
அனைத்து உறுப்பினர்களும் தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பு கூடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து முதலில் 11.30 மணி வரை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை கூடியபோதும் மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைகள் இன்று முழுமைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இடதுசாரிகள் ஊர்வலம்:
முன்னதாக நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை இடதுசாரி கட்சிகள் நடத்தின. இதில் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட எம்.பிக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அரசை எதிர்த்து கோஷமிட்டபடி ஊர்வலம் நடத்தினர்.
விலைவாசியைக் குறைக்க அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.