விசைப் படகு மீனவர்கள் 45 நாள் மீன் பிடிக்க தடை
தூத்துக்குடி: விசைப் படகு மீனவர்கள் தமிழக கடற் பகுதிகளில் 45 நாள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அது அமலுக்கு வந்துள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி மமுதல் மே 30ம் தேதி வரை விசைப் படகுகளில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்தக் கால கட்டத்தில் மீன்கள் குஞ்சு பொறிக்கும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுகிறது. அந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி இன்று முதல் மே மாதம் 30ம் தேதி வரை விசைப் படகுகளில் சென்று ஆழ் கடலில் மீன் பிடிக்கக் கூடாது. நாட்டுப் படகுகளில் சென்று மீன் பிடிக்கத் தடை இல்லை.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம், தூத்துக்குடி, கடலூர், சென்னை காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த சுமார் 3000 விசைப்படகுகள், ராமேஸ்வரம், கீழக்கரை, ஏர்வாடி, மண்டபம் ஆகிய இயற்கை துறைமுகங்களில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் என மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று முதல் தடை காலம் தொடங்கியுள்ளதால், விசைப் படகுகள் அனைத்தும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்தக் காலகட்டத்தில் படகுகள், மீன் பிடி வலைகள் ஆகியவற்றை பழுது பார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர்.