இரு வேறு விபத்து-சகோதரர்கள் உள்பட 5 பேர் பலி
திருச்சி: தமிழகத்தில் இன்று நடந்த இருவேறு சாலை விபத்துக்களில் சகோதரர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராஜமுருகன் (26), அவரது சகோதரர் சக்திவேல் (22) மற்றும் அனந்தராஜ் (22), மணிராஜ். 4 பேரும் திருவையாறுக்கு இன்று காரில் புறப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ராஜமுருகனும், சக்திவேலும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்த அனந்தராஜையும், மணிராஜையும் அப்பகுதியினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அனந்தராஜ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். மணிராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் நடந்த மற்றொரு விபத்தில் 2 பேர் இறந்தனர். திருச்சி ரயில் நிலையம் அருகில் பைக்கும், தனியார் பஸ்சும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்தவர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.