இன்று மீனாட்சி பட்டாபிஷேகம்-21ம் தேதி ஆற்றில் இறங்குகிறார் அழகர

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாள் சித்திரைத் திருவிழா உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி பட்டாபிஷேகம் இன்று மாலை 6.58 முதல் 7.22க்குள் நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து டி.கண்ணன் செங்கோலைப் பெற்று 2ம் பிரகாரத்தை வலம் வந்து மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார்.
9ம் நாள் திருவிழாவான நாளை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் நடைபெறும்.
10ம் நாளான 18ம் தேதி காலை 9.30 மணி முதல் 9.54க்குள் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் முறையாக மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்திலும் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி தேரோட்டம் நடைபெறும். பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். 20ம் தேதி தேவேந்திர பூஜை நடைபெறும்.
கள்ளழகர் மதுரை புறப்பாடு
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அருள்மிகு கள்ளழகர் அழகர் கோவிலிலிருந்து ஏப்ரல் 18ம் தேதி மதுரைக்குப் புறப்படுகிறார். வழியெங்கும் மண்டகப் படிகளில் அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
20 ம் தேதி மாலை தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை மதுரைக்குள் வரவேற்று அழைத்துச் செல்வர்.
ஏப்ரல் 21ம் தேதி காலை 7.05 முதல் 7.20க்குள் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நெருங்குவதையொட்டி மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்புற செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications