ப.சிதம்பரம் பொருளாதார நிபுணரா?-பாஜக கேள்வி

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு குறித்து ராஜ்யசபாவில் இன்று நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்வந்த் சிங் பேசுகையில்,
பல மாய்மாலங்களைக் காட்டி நிதியமைச்சர் சிதம்பரம் தன்னை ஒரு பொருளாதார நிபுணராக காட்டிக் கொள்கிறார். உண்மையில் அவர் ஒரு வரி வழக்குகள் தொடர்பான சிறந்த வக்கீல்.
அவர் கொண்டு வரும் வரி விதிப்புகளில் ஏற்படும் சிக்கல்களில் அவரே மாட்டிக் கொண்டு முழிப்பார் என்றார்.
ஜஸ்வந்த் சிங் இவ்வாறு பேசும்போது அமைச்சர் சிதம்பரம் அவையில் இல்லை.
தொடர்ந்து ஜஸ்வந்த் பேசுகையில், இந்த அரசில் தேவைக்கு அதிகமான பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். அதனால்கூட அதிக பிரச்னைகள் உண்டாகிறது போலிருக்கிறது.
கடைசி முகலாய மன்னரான அவுரங்கசீப்பின் மகன் ஷா ஆலமின் அதிகாரமாவது டெல்லியில் இருந்து பாலம் வரையிலான சில கி.மீ. தூரத்துக்கு இருந்தது. ஆனால் பிரதமர் மன்மோகனின் அதிகாரம் டோர் நம்பர் 7, ரேஸ்கோர்ஸ் சாலைக்குள்ளேயே அடங்கி கிடக்கிறது.
அவர் ஒரு பிரதமர். இன்னும் பதவியில் இருக்கிறார். லோக்சபா தேர்தல் கூட அறிவிக்கப்படவி்லலை.
ஆனால் அதற்குள், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக சில மூத்த காங்கிரஸ் அமைச்சர்கள் வருணிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இன்னும் உள்ள அடிவருடி அரசியலையே இதை காட்டுகிறது என்றார் ஜஸ்வந்த்.
இந்த கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பி.ஜே.குரியன், ஆர்.கே.தவான் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜஸ்வந்த் சிங் பேச்சை கண்டித்து காங்கிரஸ் தரப்பில் கோஷம் போட்டனர்.
தேர்தலே அறிவிக்காத நிலையில் பாஜக கூட தமது பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவித்துள்ளதே என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த பாஜக உறுப்பினர் அருண் ஷோரி, நாங்கள் ஆட்சியில் இருந்த எந்த சமயத்திலும் இப்படி (பிரதமர் வேட்பாளரை முன் கூட்டியே) அறிவித்ததில்லை என்றார்.
அப்போது, சமீபத்தில் அமைச்சர் பதவியேற்ற புதுச்சேரி காங் உறுப்பினர் நாராயணசாமி, எங்கள் கட்சிக்காரர்களுக்கு தங்கள் கருத்தை வெளிப்படையாகக் கூறும் சுதந்திரம் இருக்கிறது என்றார்.
இதற்கு, அந்த கருத்துகள் புகழ்ச்சி அரசியலாக இருக்கக்கூடாது என்று மீண்டும் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
ஜஸ்வந்த் சிங் பேச்சால் இன்று ராஜ்யசபா விவாதத்தில் சூடு பறந்தது.












Click it and Unblock the Notifications