வாசுதேவநல்லூர் அருகே அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை
நெல்லை: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக இன்று பிற்பகல் 3 பேர் அடுத்தடுத்து சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள பேச்சியம்பட்டி, கீழப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான சிவக்குமார், மனோகரன் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் மகேந்திரனை, சிவக்குமாரும், மனோகரனும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இந்தத் தகவல் அறிந்ததும் மகேந்திரனின் தந்தையும், தம்பியும் அரிவாள்களுடன் அங்கு விரைந்தனர். மகேந்திரனை வெட்டி விட்டுத் தப்பி ஓட முயன்ற சிவக்குமாரையும், மனோகரனையும் விரட்டிப் பிடித்த அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் அண்ணன், தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த பயங்கர கொலைகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.