கூட்டுறவு வங்கியில் கள்ள நோட்டு-நகை கடன் வாங்கியவர் அதிர்ச்சி
குளச்சல்: குளச்சல் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை கடன் வழங்கியபோது அதில் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி அதை உடனே பெற்றுக் கொண்டு வேறு நோட்டை கொடுத்தனுப்பியது.
குளச்சலில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் இயேசுதாசன் என்பவர் நகைகளை அடகு வைத்து ரூ.25,000 கடன் வாங்கினார்.
அந்த பணத்தை அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்யச் சென்றார். பணத்தை வாங்கிய வங்கி ஊழியர் அதில் ஒரு 500 ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருப்பதை கண்டுபிடித்தார்.
உடனடியாக இயேசுதாசனிடம் வங்கி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது கூட்டுறவு வங்கி கிளையில் நகை கடன் பெற்றது குறித்து அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நோட்டை அவரிடமே வங்கி அதிகாரிகள் கொடுத்து விட்டனர்.
இயேசுதாசன் கூட்டுறவு வங்கி கிளைக்கு சென்று கள்ள நோட்டை காண்பித்து விவரத்தை கூறினார். உடனடியாக அவருக்கு மாற்று நோட்டு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிப்பதாக வங்கி நிர்வாகம் கூறியது.
நாகர்கோவிலில் 2 வாரங்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி பேராசிரியர் ஒருவருக்கு கொடுத்த பணத்தில் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை எல்ஐசி அலுவலகத்தில் வாங்க மறுத்து கிழித்து அனுப்பினர்.
இதனால் நோட்டை திருப்பி வாங்க வங்கியும் மறுத்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடந்து வருகிறது. தற்போது மீண்டும் வங்கியில் கள்ள நோட்டுப் புழக்கம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.