மேற்கு வங்கத்தில் 2 பெண் துறவிகள் கொடூர கொலை
கொல்கத்தா: கொல்கத்தா அடுத்த கன்குர்காச்சி பகுதியில் உள்ள ஆசிரமத்தில் 2 பெண் துறவிகள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
மேற்கு வங்கம் கன்குர்காச்சி பகுதியி்ல் உள்ள பிரபலமான ஆசிரமம் குரு தாம். ஸ்வரூபானந்த மகராஜ் என்ற பெண் துறவி 43 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இவரது வளர்ப்பு மகள் மமோனி ஆசிரமத்தை நிர்வகித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரமத்துக்கு காளிபாதா தாஸ் என்ற பக்தர் வரத் தொடங்கினார். பின்னர் மமோனிக்கு நெருக்கமானவராக மாறினார். ஆசிரமத்தின் முக்கிய சீடராகவும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் தன்னை கணவனாக அங்கீகரிக்க வேண்டும் என்றுகூறி மமோனியிடம் காளிபாதா தாஸ் தகராறு செய்துள்ளார். இதற்கு மமோனி மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு சில காலம் காளிபாதா தாஸ் ஆசிரமத்துக்கு வராமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி ஆசிரமத்துக்கு அவர் மீண்டும் வந்தார். அதைத் தொடர்ந்து தினமும் ஆசிரமத்துக்கு வந்தார்.
நேற்று மாலை பக்தர்கள் ஆசிரமத்தில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தாஸ் ஆசிரமத்தின் 3வது மாடிக்கு சென்றார். அங்கு பேசிக்கொண்டிருந்த தலைமை பெண் துறவி சங்கீதா ரே(55), துலு தத்தா(65) ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதைத் தடுக்க முயன்ற ஆனந்த ரே (45) என்ற ஆசிரம ஊழியருக்கும் குத்து விழுந்தது.
அலறல் சப்தம் கேட்டு மாடிக்கு ஓடிவந்த பக்தர்கள் சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தப்பி ஓடமுயன்ற தாஸை வளைத்து பிடித்து நையப்புடைத்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் தாஸை கைது செய்தனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி உள்ளிட்ட பல விஐபிக்கள் இந்த ஆசிரம விசிறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.