மதிமுக அங்கீகாரம்-ஆணையத்தில் வைகோ விளக்கம்
டெல்லி: நாங்கள்தான் உண்மையான மதிமுக என்று தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் மதிமுகவிலிருந்து எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் பிரிந்து சென்றனர். தனி அணியாக இருவரும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாங்கள்தான் உண்மையான மதிமுக, எங்களைத்தான் மதிமுகவாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் மனு செய்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று விசாரணை நடந்தது. அப்போது செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் வரவில்லை. ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி பல்வேறு ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுக்களை வீடியோ ஆதாரங்களுடன் வைகோ, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.
வைகோவுடன், எம்.பிக்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், 6 ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி மாநில ம.தி.மு.க. எல்.எல்.ஏ. சிவா மற்றும் வக்கீல்கள் குழுவினர் நேரில் ஆஜராகினர்.
தலைமைத் தேர்தல் கமிஷனர் கோபாலசாமி, தேர்தல் ஆணையாளர்கள் நவீன் சாவ்லா, குரேஷி ஆகியோர் முன்பாக தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்.
அப்போது செஞ்சி ராமச்சந்திரன் சார்பில் ஆஜரான வக்கீல் தனஞ்செயன் இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மேலும் 4 வார கால அவகாசம் வழங்குமாறு தேர்தல் ஆணையர்களிடம் கோரினார்.
அதற்கு வைகோ தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஏற்கனவே பலமுறை கால அவகாசம் கொடுத்தாகி விட்டது. எனவே வருகிற 21ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும். அன்றைய தினம் கண்டிப்பாக வர வேண்டும் என எல்.கணேசன் தரப்புக்கு தேர்தல் ஆணையர்கள் உத்தரவிட்டு அன்றைய தினம் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்த விவகாரத்ைத முடித்துக் கொண்டு வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து ஈழத் தமிழர்கள் குறித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், இலங்கை விமானப் படைக்கு இந்தியா வழங்கி உள்ள ரேடார்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இலங்கைக்கு ராணுவ உதவிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும். ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், அமைதி பேச்சுகளை நடத்தி, ஈழத்தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வினை பெற்று தர வேண்டும் என்று அந்த மனுவில் வைகோ கூறி உள்ளார்.