இரு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்பு
சென்னை: முதல்வர் பேச்சின்போது இடையூறு செய்ததற்காக இரு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு,இந்த கூட்டத் தொடர் முழுவதும் கலந்து கொள்ள விதிக்கப்பட்ட தடை, ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்ைத எழுப்ப அதிமுகவினர் முயன்றனர். இதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதையடுத்து அதிமுகவினர் பெரும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் கருணாநிதி விளக்கம் தர முயன்றார். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அனைவரும் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் முதல்வர் பேச்சுக்கு இடையூறு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக கோ.அரி, வி.பி.கலைராஜன் ஆகியோர் இந்த கூட்டத் தொடர் முழுமையும் கலந்து கொள்ள தடை விதிப்பதாக சபாநாயர் ஆவுடையப்பன் அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று சபையில், அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து, கோ.அரி, வி.பி.கலைராஜன் ஆகியோர் மீண்டும் சபைக்கு வரும் வகையில், தீர்ப்பினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டேன். சபாநாயகர் ஏதாவது பதில் சொல்ல விரும்புகிறாரா என்று கேட்டார்.
அப்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு, அதிமுகவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களையும், பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கடுமையாக, கேவலமாக தண்டிக்க வேண்டும் என்ற நிலையை திமுக அரசு எடுக்காது.
செங்கோட்டையன் வைத்த கோரிக்கையை அறவே ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற மாட்டேன். அவர்கள் செய்த குற்றத்தை, இழிந்த செயலை என் கண் எதிரிலேயே நடந்த அந்தக் காட்சியை நான் நேராக கண்டிருந்தும் கூட, நம்முடைய அவை முன்னவர் கொடுத்த தீர்மானத்தையேற்று 2 நண்பர்களை இந்தக் கூட்டத் தொடர் முடிகின்ற வரையில், உள்ளே வரக் கூடாது என்ற தண்டனையைக் குறைத்து நான் பரிந்துரை செய்கிறேன்.
கூட்டத் தொடர் முழுவதும் என்பதற்குப் பதில் ஒரு வார காலம் என்கிற அளவுக்குக் குறைத்து அவர்களை மீண்டும் இங்கே வர அனுமதிக்க வேண்டும் என்று அவைத் தலைவராகிய தங்களை கேட்டுக் கொள்கிறேன். அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் நம்புகிறேன் என்றார்.
இதை ஏற்று அவை முன்னவரும், நிதியமைச்சருமான அன்பழகன் தண்டனையை ஒரு வார காலமாக குறைக்கும் வகையிலான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பின்னர் இதை குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றி, அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரு வாரமாக குறைக்கப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.