சென்னை-மூடப்பட்ட கல்லறை தோட்டங்களை திறக்க வலியுறுத்தல்
சென்னை: மூடப்பட்ட பழைய கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை கல்லறைத் தோட்ட வாரியம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் இடுகாடு இடப்பற்றாக்குறை பெரும் பிரச்னையாகவே உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கும் சேர்த்து 3 கிறிஸ்தவ இடுகாடுகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக இந்த இடுகாடுகளில் சடலங்களைப் புதைக்க இடம் கிடைக்காமல் கிறிஸ்தவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த பிரச்னையை சமாளிக்க, தற்போது மூடப்பட்டுள்ள இடுகாடுகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று சென்னை கல்லறைத் தோட்ட வாரியம் (MCB), சென்னை மாநகராட்சியிடம் பல ஆண்டுகளாக கோரி வருகிறது. மூடப்பட்டிருக்கும் இடுகாடுகளை 14 ஆண்டுகள் கழித்தே திறக்க வேண்டும் என்ற விதியை சுட்டி காட்டி மாநகராட்சி மறுத்துவிட்டது.
சென்னையில்தான் இந்த பிரச்னை. மும்பையில் உள்ள கல்லறைத் தோட்டங்கள் வெறும் 12 முதல் 18 மாதங்களில் திறந்துவிடப்படுகிறது. இதனால் அங்கு இடப்பிரச்னை ஏற்படுவதில்லை என்கிறார் வாரிய உறுப்பினர் அலங்கார் ராஜ்.
கீழ்பாக்கத்தில் உள்ள இடுகாடு 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. நூற்றாண்டுகளை கடந்த இந்த இடுகாட்டில் 6.5 ஹெக்டேரில் 50,000 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. கிப்பிள் ஐலாண்ட் இடுகாட்டில் 5000 உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டது.
தற்போது காசிமேடு இடுகாட்டில் இன்னும் 3,500 உடல்களை மட்டுமே புதைக்க முடியும். அன்றாடம் சராசரியாக 6 உடல்கள் இங்கு புதைக்கப்படுவதால் அடுத்த 2 ஆண்டுகளில் இதுவும் மூடப்படும் நிலை உள்ளது. இதனால் கிறிஸ்தவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதுகுறித்து மந்தவெளி லாசரஸ் தேவாலய பாதிரியார் அந்தோணிசாமி கூறுகையில், மூடப்படும் கல்லறைகளை 7 ஆண்டுக்குள் திறக்கும்படி மாநகராட்சி விதிமுறையை மாற்ற வேண்டும். சென்னையில் தற்போது 3 சதவீதத்துக்கும் அதிகமாக கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். எனவே விதிமுறையை 7 ஆண்டுகளாக தளர்த்த வேண்டியது அவசியம் என்றார்.
இது தொடர்பாக சென்னை கல்லறைத் தோட்ட வாரியம் சார்பில் மீண்டும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், புதைக்கப்படும் சடலங்களில் 80 சதவீத பாகங்கள் வேகமாக மக்கிவிடும். எலும்பு போன்ற கடின பாகங்கள் அழிவதற்கு பல ஆண்டுகளாகும். மூடப்பட்டுள்ள இடுகாடுகளை திறப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications