லஞ்சம்-திருச்சி மாவட்ட கருவூல பெண் அதிகாரி கைது
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் ஜான் லாரன்ஸ். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி கடந்த 1992ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பலன் ரூ.3.60 லட்சத்தை அனுமதித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு திருச்சி மாவட்ட கருவூலத்துக்கு நேற்று முன்தினம் வந்தது. இந்த தொகை முழுவதையும் உடனே வழங்க ஜான் லாரன்சிடம் கருவூல அதிகாரி ராஜலட்சுமி ரூ. 2,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் கொடுத்துவிட்டு, லஞ்சத் தொகையை ராஜலட்சுமியிடம் லாரன்ஸ் நேற்று கொடுத்தார்.
முன்னதாக அங்கு வந்து காத்திருந்த போலீசார், ராஜலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், ராஜலட்சுமியின் மேஜை டிராயரை சோதனை செய்தபோது கணக்கில் வராத ஏராளமான பணம் இருந்துள்ளது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் ராஜலட்சுமியை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டிலும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் திருச்சி அரசுத்துறை அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.