மன்னரை சந்தித்து விரைவில் வெளியேறுமாறு கூற பிரசந்தா முடிவு
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மன்னர் ஞானேந்திரா கெளரவமாக வெளியேறி விட வேண்டும் என விரும்புகிறோம். இதை நானே மன்னரை நேரில் சந்தித்து பேசுவேன்.
நிலைமையை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவராகவே விலகி விட வேண்டும்.
மன்னர்கள் விரட்டப்பட்டதும், தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதும் கடந்த கால வரலாற்றில் நாம் காணலாம். ஆனால் அப்படி ஒரு நிலை நேபாளத்தில் நடக்கக் கூடாது என்று விரும்புகிறோம்.
மக்கள் தீர்ப்பை மதித்து விலகி விட தற்போது மன்னருக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் பயன்படுத்திக் கொண்டு அரண்மனையிலிருந்து வெளியேறி விட வேண்டும்.
கடந்த காலத்தில் மன்னர் செய்த செயல்களுக்கு மக்களிடம் மன்னிப்பு கிடைக்காது. மக்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்றார் பிரசந்தா.
நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கவுள்ளது. முழுமையான தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் 601 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் மாவோயிஸ்ட் கட்சியே பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் நிலை உள்ளது.
மாவோயிஸ்ட் வெற்றியின் மூலம் 240 ஆண்டு கால மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட் கட்சியின் 2ம் நிலைத் தலைவரான பாபுராம் பட்டாராய், அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு வெளியேற நான்கு வார கால கெடு விதித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.