மருத்துவர்களுக்கு கட்டாய கிராமப்புற சேவை: கமிட்டி பரிந்துரை
டெல்லி: மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு கட்டாய கிராமப்புற சேவையாற்ற வேண்டும் என சாம்பசிவ ராவ் கமிட்டி மத்திய சுகாதாரத் துறைக்குப் பரிந்துரைத்துள்ளது.
மருத்துவ மாணவர்கள் ஒரு ஆண்டு கட்டாய கிராமப்புற சேவையாற்ற வேண்டும் என்ற முடிவை கடந்த ஆண்டு மத்திய சுகாதாரத் துறை எடுத்தது. இதற்கு நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களிடையே கடும் எதிர்ப்புகிளம்பியது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
தமிழகத்தில் இந்தப் போராட்டம் பெரிய அளவில் இருந்தது. இதையடுத்து சாம்பசிவ ராவ் தலைமையில் 6 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு அறிவித்தது. இந்த கமிட்டியினர் நாடு முழுவதும் சென்று மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் கருத்தறிந்தது.
அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறையிடம் இந்தக் கமிட்டி பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களது படிப்புக் காலத்தோடு சேர்த்து ஒரு ஆண்டு கிராமப்புற சேவையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி என பாரபட்சம் இல்லாமல் அனைத்து மாணவர்களும் இந்த கட்டாய கிராமப்புற சேவையை மேற்கொள்ள வேண்டும்.
கிராமப்புற சேவைக்காலத்தின்போது மாதம் ரூ. 10 ஆயிரத்திற்குக் குறையாமல் உதவித் தொகை அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.