நதியா வழக்கு சிபிஐயிடம் போகுமா?
வேலூரைச் சேர்ந்த கைதி கணேசன், தனது மனைவி நதியாவை சிறை துணை ஜெயிலர் உள்ளிட்டோர் கற்பழித்து விட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நதியாவை திருப்பூரில் வைத்து மீட்ட போலீஸார் அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நதியாவுக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று அவரது தாயார் தெரிவித்தார். மேலும் நதியா கன்னி கழியாத பெண் என்று போலீஸ் தரப்பில் ஒரு மருத்துவ அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இதனால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து தவறான வழக்கைப் பதிவு செய்தவர்கள் குறித்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நதியா - கணேசன் திருமணம் உண்மை என்பதற்கான ஆதாரமாக புகைப்படங்கள் வெளியாகின. மேலும், கணேசனுக்கு நதியா எழுதிய காதல் கடிதங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. உண்மை கண்டறியும் குழுக்களும் இதை உறுதி செய்தன.
இந்த நிலையில் கணேசன் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாக அவரது வழக்கறிஞர் புது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து வேலூர் மாவட்ட நீதிபதியை விசாரிக்க உத்தரவிட்டது. அவரும் விசாரித்து, சிறையில் கணேசன் கொடுமைப்படுத்தப்பட்டார் என்று அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து கணேசனை வேறு சிறைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நதியா, கணேசன் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் அய்யப்பன், ஹரிபாபு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, நீதிமன்றத்தை இந்த வழக்கில் ஏமாற்றியுள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும். அப்போதுதான் உண்மைகள் தெரிய வரும் என்றார்.
இதையடுத்து சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர், நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க தயாராக இல்லை. இருப்பினும் நீதிமன்றம் உத்தரவிட்டால் விசாரிப்போம். பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் தேவை என்றார்.
இந்த நிலையில், புதிதாத வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆஜராகி என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. என்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும். கணேசன், நதியா தொடர்பான பல புகைப்படங்கள் என்னிடம் உள்ளன என்றார்.
அதற்கு நீதிபதிகள், உங்களிடம் என்ன ஆதாரம் இருந்தாலும் அதை வழக்கறிஞர் சங்கரசுப்புவிடம் கொடுக்க வேண்டும். அவர்தான் இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்து போராடி வருகிறார் என்று கூறி வழக்கை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைத்தனர்.