ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி- கருணாநிதி
சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்ட பின்னரும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவது சரியல்ல என முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் பாமகவின் ஜி.கே.மணி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் ஆகியோர் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதிரடிப்படையினரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
உலக விஷயங்களை எல்லாம் அறிந்து கொள்ள ஆவல் காட்டும் ஜி.கே.மணி, இந்த விஷயம் பற்றி தெரிந்து கொள்ளாதது ஏன் என்பது தெரியவில்லை.
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையினரால் சிலர் பாதிக்கப்பட்டனர். அது பற்றி அறிய நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.
அவர்கள் அறிக்கை தரும் முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்டமாக ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கர்நாடகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விவரமும் அறிக்கையில் கொடுக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடி திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ரசீதும் பெறப்பட்டுள்ளது.
இவ்வளவு நடந்த பிறகும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நீதி கேட்டு நெடும் பயணம் என்ற பெயரில் போராட்டம் நடத்துகிறது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விசாரணைக் கமிஷன் கொடுத்த பட்டியலின்படி நிதி வழங்கப்பட்டு விட்டது.
கர்நாடக அரசு தான் நிதி உதவி வழங்க வேண்டும். எனவே போராட்டம் நடத்த வேண்டும் என்றால் கர்நாடகாவை எதிர்த்து தான் நடத்த வேண்டும்.
இந்த போராட்டம் பற்றி நான் கேள்விப் பட்டதும் தா. பாண்டியனை அழைத்து நிதி கொடுத்த ஆதாரங்களை காட்டினேன். தமிழக எல்லைக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் கடமையை செய்து விட்டோம்.
அதன் பிறகும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல போராட்டம் நடத்துவது சரியான முன் மாதிரி அல்ல.
முன்னதாக போராட்டம் அறிவிக்கப்பட்டதால், போராட்டம் நடத்தி கைதான 200 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தாக்கீது அனுப்பியதால் விடுதலை ஆகியுள்ளார்கள்.
பிரச்சினை முடிந்து விட்ட பிறகு பிரச்சினை இருப்பதாக கூறி போராடுவது தேவை இல்லாதது என்பதை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுபட்டவர்கள் யார்-யார் என்று அரசிடம் எடுத்துக் கூறினால் உதவி செய்ய அரசு தயாராக உள்ளது. அதை விட்டு விட்டு போராட்டம் நடத்துவது என்ன நியாயம்?
கர்நாடக அரசு உதவி வழங்க வேண்டும் என்பது பற்றி நாம் எடுத்துச் சொல்ல தயாராக இருக்கிறோம். கர்நாடகம் காவிரி, ஒகேனக்கல் கொடுக்க முன்வரவில்லை என்றாலும் தமிழகத்தின் உரிமையை பெற்றே தீருவோம். இது நிச்சயம் என்றார் கருணாநிதி.