குழந்தை மாறாட்ட சர்ச்சை-இன்று டிஎன்ஏ சோதனை
சென்னை: சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு இன்று டிஎன்ஏ சோதனை செய்யப்படவுள்ளது.
சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி காமாட்சி என்ற பெண்ணுக்கும், பரக்கத் பேகம் என்ற பெண்ணுக்கும் குழந்தைகள் பிறந்தன.
ஆனால் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் மாறி விட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. போராட்டமும் வெடித்தது.
இதையடுத்து டிஎன்ஏ சோதனைக்கு குழந்தைகளை உட்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஜார்ஜ்டவுன் 16வது நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல்ச செய்தனர். அதைப் பரிசீலித்த நீதிபதி சுஜாதா, நேற்று மாலை மருத்துவமனைக்கு நேரில் வந்தார். அங்கு விசாரணை நடத்திய அவர் டிஎன்ஏ சோதனைக்கு அனுமதி வழங்கினார்.
இதையடுத்து இரு குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர் ஆகியோரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இன்று டிஎன்ஏ சோதனை நடத்தப்படுகிறது. முடிவு தெரிய ஒரு வாரமாகும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, பிறந்த குழந்தைதகள் இரண்டும் தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்து வருவதால் மிகவும் பரிதாபமாக உள்ளன. இரு தாய்மார்களிடமிருந்தும் நேரடியாக அந்தக் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க முடியவில்லை.
அந்தத் தாய்களிடமிருந்து தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எந்தத் தாயின் பால், எந்தக் குழந்தைக்குக் கொடுக்கப்படுகிறது என்பதை மருத்துவமனை தரப்பில் சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.