மைக் செட்டில் பாட்டு போடுவதில் தகராறு-வாலிபர் கொலை
மதுரை: தண்ணீர் பந்தலில் அமைக்கப்பட்ட மைக் செட்டில் பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை கீழ சந்தைபேட்டையே சேர்ந்தர் ராஜேந்திரன் என்பவரது மகன் தங்கபாண்டி (22). சித்திரை திருவிழாவின்போது தண்ணீர் பந்தல் அமைப்பதில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகர்களான ஜெயவேல், சலீம், ஜாகீர் உசேனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காமராஜர் சாலை யானைக்குழாய் தெருவில் நேற்று முன்தினம் இரவு தங்கபாண்டி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், எஸ்ஐ மாதவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் தண்ணீர் மற்றும் மோர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த மைக் செட்டில் நீண்ட நேரம் பாட்டு போட சொல்லி ஜெயவேல், சலீம், ஜாகீர் உசேன் ஆகியோர் கூறியுள்ளனர். அதற்கு தங்கபாண்டியன் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் தங்கப்பாண்டியை 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ஜெயவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சலீம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.