கல்கி பகவான் கோவில் விழாவில் நெரிசல் - 2 பேர் பலி
திருப்பதி அருகே வரதாபாளையம் என்ற இடத்தில் கல்கி பகவான் தங்க கோவில் நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 400 கோடியில் இந்த நகரம் உருவாகியுள்ளது. நேற்று அதன் திறப்பு விழாவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. கல்கி பகவான் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும் கூட்டம் கூடியது.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் அப்பகுதியே பெரும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. கூட்டம் கொஞ்சம் கூட குறையாமல் வந்து கொண்டே இருந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
விழா நடந்த இடத்தில் நிற்கக் கூட முடியாத அளவுக்கு கூட்டம் அதிகம் இருந்தது. இந்த நிலையில் கோவிலின் 2 மற்றும் 3வது தளங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் நிறைய பேர் கூடியதால் அது பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், நெரிசலும் ஏற்பட்டது.
பக்தர்கள் பீதியடைந்து அங்கிருந்து வெளியேற முயன்றனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சீனிவாஸ், வெங்கடேஷ் ஆகிய ஆந்திர மாநில பக்தர்கள் நெரிசலில் சிக்கி மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தங்கக் கோவில் நகர திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டு விட்டது.