இலங்கையில் ராணுவம்-புலிகள் பயங்கர சண்டை-67 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் இன்று ராணுவத்தினர் நடத்திய பயங்கர தாக்குதலை விடுதலைப் புலிகள் தடுத்து ஆவேச எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவத்தினர் 38 பேர் பலியாயினர். மேலும் 84 பேர் படுகாயமடைந்தனர்.ஆனால், தங்கள் தரப்பில் 15 பேர் மட்டுமே பலியானதாகவும் புலிகள் தரப்பில் 52 பேர் பலியானதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு யாழ்பாணத்தின் கிளாகி, முகமலை பகுதிகளில் ராணுவத்தி்ன் 55, 53வது படைப் பிரிவுகளைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் திடீரென முன்னேறி தாக்குதல் நடத்தினர்.
மேற்கே கிளாலியில் ஆரம்பித்து முகமாலை வழியாக கிழக்கே கண்டல் வரை சுமார் 7 கிமீ தொலைவுக்கு இலங்கை ராணுவத்தினர் தாக்குதலை நடத்தினர்.
ராக்கெட் வீச்சு, பீரங்கி-ஆர்ட்டிலரி தாக்குதல்கள் நடத்தியபடி கவச வாகனங்களில் ராணுவத்தினர் முன்னேறினர்.
இதையடுத்து புலிகள் பயங்கர பதிலடி தாக்குதல் நடத்தினர். இதனால் ராணுவத்திணரால் மேலும் முன்னேற இயலவில்லை.
இன்று பகல் 1 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 38 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 84 ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
ஆனால், புலிகளில் 52 பேர் பலியாகிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தங்கள் தரப்பில் 15 பேர் மட்டுமே பலியானதாகவும் 74 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.
புலிகள் வசமிருந்த சில பகுதிகளை கைப்பற்றியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், தாக்குதல் நடத்திய ராணுவத்தினரை தங்களது பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தனது தரப்பில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.
இந்த சண்டையைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் உடலங்கள் சிதறிக் கிடக்கின்றன. இந்தத் தாக்குதலை நடத்தியபோது புலிகள் வைத்திருந்த கண்ணிவெடிகளில் சிக்கி பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பலியான வீரர்களின் உடல்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.