ரயில்வேக்கு தேவைப்படும் 22,500 பெட்டிகள்: வேலு
டெல்லி: 11வது ஐந்தாண்டு காலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு 22,500 புதிய கோச்சுகள் (பெட்டிகள்) தேவைப்படும் என்று லோக்சபாவில் ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு தெரிவித்தார்.
அவர் பேசுகையில், நடப்பு 11வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் (2007-2012) பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு 22,500 புதிய கோச்சுகள் தேவைப்படுகின்றன.
இப்போது பயன்படுத்தப்படுகின்ற கோச்சுகள் இரும்பிலானவை. அதிக கனமாகவும், பலமற்ற வடிவமைப்பிலும் உள்ளன. இந்த கோச்சுகளில் அதிக சேதங்கள் ஏற்படுகின்றன. கூடுதல் பராமரிப்பும் தேவைப்படுவதோடு இவற்றின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள்தான். பயணிகள் கொள்ளளவும் குறைவாக உள்ளது.
தற்போது வெளியில் இருந்து பெறப்பட்ட புதிய தொழில்நுட்பத்தின்கீழ் உயர்தர துருப்பிடிக்காத ஸ்டீல் கோச்சுகளை உருவாக்கி சில ராஜதானி, சதாப்தி ரயில்களில் இயக்கி வருகிறோம்.
இதேபோல் மற்ற மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் வகை ரயில்களுக்கும் தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோச்சுகளை தயாரித்து படிப்படியாக உபயோகத்தில்விட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகை கோச்சுகள் பார்ப்பதற்கு அழகாகவும், அதிக கொள்ளளவையும், 35 ஆண்டுகால ஆயுட்காலத்தையும் உடையவை. பராமரிப்பு செலவு மிகவும் குறைவு.
2008-09ம் நிதியாண்டில் இதுபோன்ற 100 அதிநவீன கோச்சுகள் தயாரிக்கப்படவுள்ளன.
பெரும்பாலான ரயில் விபத்துகளில் கோச்சுகள் ஒன்றோடு ஒன்று மோதி உராய்கின்றன. மோதிய வேகத்தி்ல் ஒரு கோச்சின் மேல் மற்றொரு கோச் ஏறி பயணிகள் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. இவற்றைத் தடுக்கும்வகையில் புதிய ரக கோச்சுகளில் மோதலைத் தவிர்க்கவல்ல சென்ட்ரல் 'பஃபர் கப்ளர்' என்ற தடுப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
கடந்த நிதியாண்டிலேயே இந்த வகை பாதுகாப்பான 135 கோச்சுகள் ரயில்வே ஐசிஎப் (ரயில்வே கோச் பாக்டரி) கிளைகளில் தயாரிக்கப்பட்டு கைவசம் உள்ளன என்றார்.