காதலித்தேன், கல்யாணம் செய்யவில்லை - கூறுகிறார் ரகுவண்ணன்
சென்னை: ஸ்டெபியை நான் காதலித்தது உண்மை. ஆனால் அவரது தவறான போக்கு தெரிந்த பின்னர் அவரை விட்டு விலகி விட்டேன் என்று இயக்குநர் மணிவண்ணனின் மகனும், நடிகருமான ரகுவண்ணன் கூறியுள்ளார்.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம் - மாலா தம்பதியினரின் மகள் ஸ்டெபி. மாலா சினிமா நடன நடிகை ஆவார். பல படங்களில் அவர் ஆடியுள்ளார். ஸ்டெபியும் உதவி இயக்குநராக இருக்கிறார். நேபாளி படத்தில் இயக்குநர் துரையிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஸ்டெபி அங்கு மணிவண்ணன் குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் தன்னை ரகுவண்ணன், காதலித்து, ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் இப்போது வாழ மறுப்பதாகவும், மணிவண்ணன் குடும்பத்தினரும், இயக்குநர் சீமான் உள்ளிட்டோரும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்டெபி.
மேலும், தானும், ரகுவண்ணனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அடங்கிய சிடியையும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டார். 25 படங்கள் ஸ்டெபி வசம் உள்ளன. அதில் பல படங்களில் அவரும் ரகுவும் நெருக்கமாக உள்ளனர். சில படங்களில் இருவரும் மேலாடைகள் இன்றியும் காணப்படுகின்றனர்.
ரகுவண்ணன் குறித்து ஸ்டெபி மேலும் கூறுகையில், ரகுவண்ணன் என்னிடம் மிக நெருக்கமாக பழகினார். செக்ஸ் குறும்புகளை செய்யத் தவற மாட்டார். ஆனாலும், நான் உடல் ரீதியான உறவுக்கு மட்டும் உட்படாமல் மிகவும் கவனமாக இருந்து கொண்டேன் என்று கூறினார் ஸ்டெபி.
ல்டெபியின் புகார் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் புகாரை ரகுவண்ணன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து ரகுவண்ணன் கூறுகையில், ஸ்டெபியை நான் காதலித்தேன். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவரது தவறான நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு அவரிடமிருந்து விலகி விட்டேன்.
இப்போது சில வீடியோ படங்களைக் காட்டி மிரட்டுகிறார் ஸ்டெபி. என்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் ஸ்டெபி. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என்றார் ரகுவண்ணன்.
இதேபோல இயக்குநர் சீமானும் தன் மீதான புகாரை மறுத்துள்ளார். தேவையில்லாமல் எனது பெயரை இழுத்துள்ளார் ஸ்டெபி. நான் யாரையும் மிரட்டவில்லை என்று கூறியுள்ளார் சீமான்.