குடும்பத்துடன் கடத்தல்- அதிமுக கவுன்சிலர் கைது
சென்னை: கடனை திருப்பித் தராததால் தொழிலதிபர் குடும்பத்துடன் கடத்தப்பட்டார். தகவலறிந்த போலீசார் அவர்களை அதிரடியாக மீட்டனர். இதுதொடர்பாக அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர் வி.ஜி.என். சாந்தி நகரைச்சேர்ந்தவர் தொழில் அதிபர் சந்திரசேகர் (45). இவரது மனைவி வெற்றிச்செல்வி. இவர்களது மகள் பிரீதா. மகன் பிரவீன். கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தி ( 62). ஓய்வு பெற்ற ஆசிரியை.
சந்திரசேகர் வசந்தியிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி தராமல் தட்டிக்கழித்து வந்தார். பணத்தை வசூலித்துத் தரும்படி தாம்பரம் அதிமுக கவுன்சிலர் சாய்கணேஷிடம் முறையிட்டார் வசந்தி.
இதையடுத்து சாய்கணேஷ், அடியாட்களுடன் சென்று சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்திச் சென்று வசந்தியின் வீட்டில் சிறை வைத்தார். பணத்தை உடனே திருப்பி தரும்படி சந்திரசேகரைய அடித்து உதைத்துள்ளனர்.
இதையடுத்து, சந்திரசேகர் தனது அண்ணன் பழனிச்சாமியை போனில் தொடர்பு கொண்டு தான் குடும்பத்துடன் கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்படுவதாகவும், உடனே பணத்துடன் வசந்தி வீட்டுக்கு வருமாறு அழுது கொண்டே கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி உடனே வருவதாக கூறினார். பின்னர் தாம்பரம் உதவி கமிஷனர் தனராஜிடம் பழனிச்சாமி புகார் செய்தார். இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் வசந்தி வீட்டுக்கு சென்று சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதிரடியாக மீட்டனர்.
பின்னர் கவுன்சிலர் சாய் கணேஷை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications