7,879 புதிய ஆசிரியர்கள் நியமனம்: தமிழ் பட்டதாரிகளுக்கு சலுகை
சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு தங்கம் தென்னரசு அளித்த பதில்,
அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் பஞ்சாயத்து யூனியன் நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 6302 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
இதன்படி, பள்ளிக்கல்வியில் 724 முதுநிலை ஆசிரியர்கள், 942 பட்டதாரி ஆசிரியர்கள், 326 உடற்கல்வி ஆசிரியர்கள், 131 ஓவிய ஆசிரியர்கள், 44 இசை ஆசிரியர்கள், 74 தையல் ஆசிரியர்கள் உள்பட 2241 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தொடக்கக் கல்வியில், 1577பட்டதாரி ஆசிரியர்கள், 2444 இடைநிலை ஆசிரியர்கள், 40 உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட 4061 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
இந்த கல்வி ஆண்டில் 1,005 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இந்த பள்ளிகளுக்கு 1,005 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், கடந்த 2 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 572 பள்ளிகளுக்கு 572 புதிய பட்டதாரி ஆசிரியர்களும் உருவாக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
மொத்தம் இந்த கல்வி ஆண்டில் 7,879 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தமிழுக்கு சலுகை:
பள்ளிகளில் அனைத்து தமிழ் ஆசிரியர் பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இதனால், கல்லூரிகளில் தமிழை முழுநேர மாணவர்களாக படித்து பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ் ஆசிரியர் வேலை கிடைக்க வாய்ப்பில்லாத நிலை இருக்கிறது.
இதை கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு தமிழ் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, 2008-09ம் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும். புதிய டத்திட்டத்தின்படி ஆண்டுக்கு எட்டு பாடங்கள் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு 16 பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கட்டாய யோகா:
அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிக நிதி ஆதாரம் ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் யோகா கட்டாயமாக்கப்பட்டு, யோகா கற்றுக் கொள்ள ஒரு பாடவேளை ஒதுக்கப்படும்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போல், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மின் கட்டணத்தையும் அரசே ஏற்கும். உள்ளாட்சித் துறை அமைச்சரின் அறிவுறுத்தல்படி, கிராமப்புற பள்ளிகள் மட்டுமில்லாமல் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளின் மின் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்றார்.