பேனர் அகற்றம்-போலீசாருடன் திமுகவினர் மோதல்
கரூர்: போலி மதுபானம் விற்ற அதிமுகவினரை கண்டித்து திமுகவினர் வைத்த பேனரை போலீசார் அகற்றியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து திருச்சி டிஐஜி அசோக்குமார்தாஸ் தலைமையில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. தாந்தோனிமலையில் உள்ள ஒரு தோட்டத்தில் 576 போலி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் தானேஷ், நகர மாணவர் அணி அமைப்பாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா, தாந்தோணி நகர செயலாளர் ராயனூர் ரவி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் முத்துகுமார், ராமலிங்கம், சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் போலி மதுபானம் சப்ளை செய்த அதிமுக நிர்வாகிகளை கண்டித்தும், அதற்கு துணை போனதாக கூறி கரூர் அதிமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கண்டித்தும் கரூர் பஸ் நிலையம் அருகில் நேற்று நள்ளிரவில் திமுகவினர்டிஜிட்டல் பேனர் வைத்தனர்.
தகவலறிந்த போலீசார் அந்த பேனர்களை உடனே அப்புறப்படுத்தினர். இதையறிந்த திமுகவினர் உடனடியாக கரூர் நகர காவல் நிலையத்தைமுற்றுகையிட்டனர். இருதரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. பின்னர் முறையாக அனுமதி பெற்ற பின்பு திமுகவினர் பேனர்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது.