தேவர் சிலை:'நாடகமாடும் போலீஸ்'-வாண்டையார்
நாகப்பட்டிணம்: மதுரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்ட விஷயத்தில் போலீசார் நாடகமாடுவதாக மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகையில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீதர் வாண்டையார் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைக்காக தன்னை அர்பணித்து 4,000 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடியாக திகழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அவரது சிலையை அவமதித்துள்ளனர். இதை கண்டித்து நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்த சம்பவம் தொடர்பாக மன நோயாளி ஒருவரை கைது செய்து போலீசார் நாடகம் ஆடுகின்றனர். உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
தலைவர்களின் சிலைக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதுடன் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்றார் அவர்.
கருணாநிதிக்கு கருப்பு கொடி-சேதுராமன் கைது:
இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்ட மூமுக நிறுவனர் சேதுராமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவமதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பார்வர்டு பிளாக், தேவர் தேசிய மன்றம் உள்பட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர் பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அண்ணா பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தார். அப்போது மதுரை வரும் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) மதுரை விமான நிலைய விரிவாக்க திட்டப்பணிகள் மற்றும் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி மதுரை வந்தார்.
அவருக்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்த டாக்டர் சேதுராமன், அக்கட்சியின் நிர்வாகிகள் ஒச்சாத்தேவர், குருசாமி, பிரபு, கருப்பையா உள்பட 140 பேரையும், இதேபோல தேவர் தேசிய மன்ற மாநில தலைவர் திருமாறன், அமைப்பாளர் ராஜன், செயலாளர் பாண்டியன் உள்பட 50 பேரையும் போலீசார் முன்னெச்சரிக்கையாக நேற்று கைது செய்தனர்.
கீரைத்துறை உள்பட சில பகுதிகளில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்ட போவதாக அறிவித்து இருந்ததால் அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications