கூரியர் சேவையை முறைப்படுத்த விரைவில் சட்டம்
சென்னை: கூரியர் சேவையை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய தகவல் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஏ.ராசா கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான மின்னணு சர்வதேச மணி ஆர்டர் சேவையை இன்று சென்னையில் ராசா தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள கூரியர் சேவையை முறைப்படுத்த விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இதுதொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பல்வேறு துறைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது கூரியர் சேவையை முறைப்படுத்த தனியாக சட்டம் எதுவும் இல்லை. எனவே விரைவில் இது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் பொதுமக்களும், தபால் துறையும் பெரும் பலன் அடைவார்கள்.
மேலும் தபால் துறைக்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்கும் வகையிலான பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்கள் உள்ளூர் மக்களுக்குத் தேவையான பிற சேவைகளிலும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் லாபத்தை அதிகரிக்கலாம்.
வெறுமனே தபால்களை சுமக்கும் பணியை மட்டும் தபால்காரர்கள் செய்யக் கூடாது. பிற சேவைகளிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.
இந்தியாவில் ரயில்வே துறைக்கு அடுத்து மிகப் பெரிய கட்டமைப்பு மற்றும் சொத்துக்களுடன் கூடிய துறையாக தபால் துறை விளங்குகிறது என்றார் அவர்.