கருணாநிதி ராஜினாமா கோரி அதிமுக ஆர்பாட்டம்
சென்னை: போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் கருணாநிதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி 28ம் தேதி அதிமுக ஆர்பாட்டம் நடத்துகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபையில் திமுக அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட அரசு உயர் அதிகாரிகள் வரை அனைவரது தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்படுவதை அதிமுக சார்பில் ஆதாரப்பூர்வமாக விளக்கி கேள்வி கேட்கப்பட்டது.
முதலில் மறுத்த கருணாநிதி பின்னர், வேகமாக விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து வரும் இந்தக் காலத்தில் யார் வேண்டுமானாலும், எந்தத் தொலைபேசியையும் ஒட்டுக் கேட்கலாம்; இது சாதாரண விஷயம் என்றார்.
தலைமைச் செயலாளர்-ஊழல் தடுப்பு இயக்குனரிடையே நடந்த தொலைபேசி உரையாடலில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு, தலைமைச் செயலாளர் ஒரு தலைப்பட்சமாக உத்தரவிடும் போக்கு, திமுக அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது.
கர்நாடகாவில் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே மீது இதே குற்றச்சாட்டு எழுந்தபோது, இந்தியா முழுவதும் அதன் அதிர்வலைகள் எழுந்தன. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
எதிர்க்கட்சியின் அலுவலக தொலைபேசியை ஒட்டுக்கேட்ட குற்றத்திற்காக அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன் தனது பதவியையே இழந்தார்.
ஜனநாயகத்திற்கு விரோதமாக நிகழ்த்தப்பட்ட தொலைபேசி ஒட்டுக்கேட்பு சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று கருணாநிதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்தி, அதிமுக சார்பில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு, வரும் 28ம் தேதி காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதில் கூறியுள்ளார்.