உ.பி. எம்எல்ஏ மகன் ஓட்டிச் சென்ற கார் மோதி 4 பேர் பலி
லக்னோ: சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது எம்எல்ஏ மகன் ஓட்டிச் சென்ற கார் ஏறியது. இந்த கொடூர விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாயினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
உத்திர பிரதேசம் சமாஜ்வாடி கட்சி பெண் எம்எல்ஏ ஷதாப் பாத்திமாவின் மகன் காஸிப் அப்பாஸ் (19). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அப்பாஸ் நேற்று காலை தனது தாய் பயன்படுத்தும் சைரன் பொருத்தப்பட்ட காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
குடிபோதையில் இருந்த அப்பாஸ் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏறியது.
இதில் சிக்கியவர்கள் அலறினர். தாறுமாறாக ஓடிய கார் பின்னர் 4 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதி நின்றது.
விபத்ைதத் தொடர்ந்து அப்பாஸ் தப்ப முயன்றார். ஆனால் அப்பகுதியினர் அவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையின்போது, தான் குடிபோதையில் காரை ஓட்டவில்லை என்றும், எதிரில் வந்த பைக் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது மோதியதாக அப்பாஸ் தெரிவித்தார்.
நடைபாதையில் கார் ஏறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாசை போலீசார் கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்து மதுபானம், சிகரெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் மது அருந்தியது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றத்தில் அப்பாஸ் ஆஜர்படுத்துப்பட்டார். அவரை 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீன் மனுவும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications