அத்வானியின் நாகர்கோவில் வருகை திடீர் ரத்து
நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்துக்கு வருவதாக இருந்த பாஜக தலைவர் அத்வானியின் வருகை திடீரென்று ரத்தானது.
விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கடந்த 5ம் தேதி பொள்ளாச்சியில் தாமரை யாத்திரை தொடங்கியது. தென்மண்டல அளவிலான இந்த யாத்திரை நேற்று நாகர்கோவிலில் முடிவடைந்தது. இதையொட்டி பொதுக் கூட்டத்திற்கும், யாத்திரை நிறைவு விழாவுக்கும் ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. இதில் அத்வானி கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாலை 6 மணிக்கு அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவார். 7 மணிக்கு பொதுக் கூட்டம் நடக்கும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை 4.30 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வரும் அத்வானியை வரவேற்க பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, மாநில தலைவர் இல.கணேசன், மாநிலத் துணைத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் வேல்பாண்டியன் ஆகியோர் காத்திருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது கன மழை பெய்தது. இதனால் வானிலை மோசமாக இருந்ததால் அவரது வருகை தாமதமாகும் என்று எர்ணாகுளத்தில் முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து வானிலை மோசமாக இருந்தததால் பாதுகாப்பு அதிகாரிகள் ஹெலிகாப்டரை இயக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து அத்வானியின் வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மற்ற தலைவர்களை வைத்து பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications