மதுரையில் பஸ் கண்ணாடிகள் உடைப்பு - பதற்றம்
மதுரை: மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 2 அரசு பஸ் கண்ணாடிகளை சேதப்படுத்திவிட்டு ஒரு கும்பல் தப்பியோடியதால் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மீது சில நாட்களுக்கு முன்பு சாணம் ஊற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு எழுந்தது.
இதைக் கண்டித்து பார்வர்டு பிளாக் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டதால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது. இந்நிலையில் சிலை மீது சாணம் ஊற்றியதாக ஒரு மனநோயாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் இதை போலீஸ் நடத்தும் நாடகம் என்று கூறி உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி தேவரின அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன.
இந்த நிலையில் தேவர் சிலை அவமதிப்பை கண்டித்து சில நாட்களுக்கு முன்பு பார்வர்டு பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக் தென் மாவட்டங்களில் பந்த் அறிவித்தார். குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர இந்த போராட்டத்துக்கு பெரிய ஆதரவு இல்லை.
இதையடுத்து, மதுரை ஐடி பூங்கா மற்றும் விமானநிலைய விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்த மூமுக நிறுவனர் சேதுராமன் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு சிலர் நேற்று காலையில் சிறப்பு பூஜை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்களின் மீது ஒரு கும்பல் திடீரென்று கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் 2 பஸ் கண்ணாடிகள் நொறுங்கின.
அங்கு காவலுக்கிருந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் மதுரையில் மீண்டும் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.