'பாலு': ராஜ்யசபாவில் அதிமுக-பாஜக வெளிநடப்பு

இன்று ராஜ்ய சபா தொடங்கியவுடன் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தனது மகன்களின் நிறுவனத்துக்கு அரசு கேஸ் சப்ளை பெற்றது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பாஜக, அதிமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிமுக எம்.பி. மைத்ரேயன் எழுந்து, டி.ஆர்.பாலு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் விளக்க வேண்டும் என்றார்.
அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ் பாலுவிடம் விளக்கம் கேட்க வேண்டும், பிரதமர் மன்மோகன்சிங் தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இதை திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கவே அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சுஷ்மாசு தலைமையில் பாஜக, அதிமுக எம்.பிக்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
ஆனால், கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது என்று கூறிய ராஜ்ய சபா தலைவர் ஹமீது அன்சாரி, அனைவரையும் அமைதி காக்குமாறு கோரினார்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு இந்த பிரச்ணை குறித்து பேசலாம் என்றார். ஆனால், அதை ஏற்காத அதிமுக மற்றும் பாஜக எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவர்களுடன் ஐக்கிய ஜனதா தளமும் வெளிநடப்பு செய்தது.
லோக் சபாவிலும்...
அதே போல லோக் சபாவிலும் டி.ஆர்.பாலு விவகாரம் இன்று எதிரொலித்தது. டி.ஆர்.பாலுவை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பிக்கள் கோஷமிட்டனர். (இங்கு அதிமுவுக்கு எம்பிக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இந்தப் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்றனர். ஆனால், அதை சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி ஏற்கவில்லை. இது குறித்து நோட்டீஸ் தருமாறு வெள்ளிக்கிழமையே சொன்னேன். ஆனால், இன்று தான் தந்துள்ளீர்கள்.
அதைப் பார்த்துவிட்டுத் தான் எந்த முடிவும் எடுக்க முடியும். சபையை ஒத்தி வைக்க முடியாது என்றார் திட்டவட்டமாய்.
விளக்குகள் அணைப்பு:
ஆனால், பாஜகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபடவே சபாநாயகர் சாட்டர்ஜி அவையை ஒத்தி வைக்க மறுத்ததோடு, வழக்கத்துக்கு மாறாக லோக்சபாவில் விளக்குகளை அணைத்து, கேமராக்களை நிறுத்த உத்தரவிட்டார். இதையடுத்து அவையில் அமைதி திரும்பியது.












Click it and Unblock the Notifications