ரேஷனில் குறைந்த விலையில் சமையல் எண்ணெய்-மத்திய அரசு அறிமுகம்
டெல்லி: ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் சமையல் எண்ணெய் விற்பனை ஜூன் மாதம் தொடங்குகிறது.
உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சமையல் எண்ணெய் விலை 31 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சோயாபீன் எண்ணெய் 20.5 சதவீதமும், கடுகு எண்ணெய் 24 சதவீதமும் உயர்ந்தது. சூரியகாந்தி எண்ணெய் 30 சதவீதமும், பாமாயில் 17 சதவீதமும், வனஸ்பதி 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. விலை உயர்வை குறைக்க இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. என்றாலும் விலை குறைவில்லை.
எனவே மத்திய அரசு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அந்தோதயா, அன்னயோஜனா திட்டத்தின் கீழ் தள்ளுபடி விலையில் சமையல் எண்ணெய் வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒரு லிட்டர் எண்ணைக்கு ரூ.15 தள்ளுபடி செய்யப்படுகிறது. ஜூன் மாதல் முதல் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்கப்பட உள்ளது.
இதற்கான உத்தரவு தயாராக உள்ளது. தொடக்கத்தில் 3 மாதங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். தள்ளுபடி விலையில் தொடர்ந்து வழங்குவது குறித்து விலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய உணவு வினியோக அமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இதற்காக இந்த நிதி ஆண்டில் 10 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. மாதந்தோறும் ஒரு லட்சம் டன் சமையல் எண்ணை இறக்குமதி செய்ய பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. இறக்குமதி விலையின் அடிப்படையில் தள்ளுபடி தொகை குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications