புலிகளுக்கு வெடிமருந்து கடத்தல்-திமுக பிரமுகர் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்து கடத்த முயன்றதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24ம் தேதி ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து ஏரளாமான வெடி பொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கியூ பிரிவு டி.ஐ.ஜி. சங்கர் ஜூவால் மற்றும் கடலோர காவல்படையினர் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் கடலுக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ஒரு கும்பல் கண்டெய்னரை கடலில் வீசி விட்டு தப்பிச்சென்றது. அவர்களை துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
கடலில் வீசப்பட்ட மிகப்பெரிய கண்டெய்னருக்குள் வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதைக் கைப்பற்ற முத்துக் குளிக்கும் மீனவர்கள் மற்றும் டைவர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.
இந் நிலையில் இந்தக் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடியவர்கள் குறித்து கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ராமேஸ்வரம் தி.மு.க. நகர் குழு உறுப்பினர் வில்லாயுதம் சிக்கியுள்ளார்.
அவருடன் சேர்ந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்ட சேதுராஜா, முத்துச்செல்வம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மண்டபம் அருகே அரியமான் கடல் பகுதியில் விடுதலைப் புலிகளுக்காக படகில் 280 லிட்டர் மண்ணெண்ணெயை கடத்திச் சென்ற உச்சிப்புளியை சேர்ந்த மனோகரன், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.