சந்தேக விதையும் சந்தேக செடியும்-ப.சிதம்பரம்
தேவகோட்டை: விவசாய கடன் தள்ளுபடியை எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். சந்தேக கண்ணோட்டத்தோடு, சந்தேகத்தை விதைத்தவர்கள், அந்த விதை முளைத்து செடியாக வளராதா, அதில் எதையாவது பறிக்கமுடியாதா என நினைக்கிறார்கள் என எதிர்க் கட்சியினரைத் தாக்கினார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் விஜயா வங்கியின் 1,052வது கிளையை ப.சிதம்பரம் திறந்து வைத்தார். வங்கியின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான பிரகாஷ் பி.மல்லையா தலைமை வகித்தார்.
விழாவில் விஜயா வங்கியின் சார்பில் கல்விக் கடன் மற்றும் மகளிர் மேம்பாடு, சிறு வணிகம் போன்றவற்றுக்கான கடன்களை சிதம்பரம் வழங்கி பேசியதாவது:
கடந்த காலங்களில் வங்கிகள் செயலற்று கிடந்தன. ஐமு கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு ரூ.2.40 லட்சம் கோடி விவசாய கடனை வழங்கியுள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் முடிய 11,63,057 பேருக்கு ரூ.18,430 கோடி கல்வி கடன் கொடுத்துள்ளோம்.
நாட்டிலேயே மிக அதிகமான கல்வி கடனை கொடுத்து விஜயா வங்கி முன்னிலையில் உள்ளது. விஜயா வங்கி என்றாலே காபி தோட்டத்திற்கு கடன் வழங்கும் வங்கி என்று தான் பெயர் இருந்தது. தற்போது மற்ற கடன் வழங்குவதிலும் முன்னணியில் திகழ்கிறது.
மத்திய அரசு விவசாயக் கடன், கல்வி கடன் வழங்குவதில் பிடிவாதமும், உறுதியான திட சிந்தனையுடன் நடந்து கொள்வதால் கொள்கையில் வெற்றி அடைந்துள்ளோம். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று எதிர்கட்சிகள் கோஷமிட்டனர்.
ரூ. 60,000 கோடி விவசாயகடன் தள்ளுபடி என அறிவித்தவுடன், எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என கேட்க தொடங்கிவிட்டனர். ஜூன் 30ம் தேதி முதல் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடியாகும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications