பெண் சிசு கொலை தேசிய அவமானம்-பிரதமர்
டெல்லி: பெண் சிசுவை கருவிலேயே அழிப்பது தேசிய அவமானம். இந்த வெட்கக்கேட்டுக்கு முடிவுகட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் கூறினார்.
மத்திய சுகாதாரத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பிலான மாநாடு டெல்லியில் நடந்தது. அதை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களில் பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டுபிடித்து அழிக்கும் வழக்கம் இருக்கிறது. இது தேசிய அவமானமாகும்.
பஞ்சாப், டெல்லி, ஹரியாணா, குஜராத் மாநிலங்களில் இதுபோன்ற வழக்கத்தால் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கணக்கெடுப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதாரத்திலும், கல்வியிலும் இந்த மாநிலங்கள் முன்னேறியுள்ளன. ஆனால் கருவிலேயே பெண் குழந்தையை அழிக்கும் வழக்கம் மட்டும் இன்னும் மறையவில்லை.
வெட்கக்கேடான இந்த விஷயத்தை நாம் அனைவரும் சேர்ந்து ஒழிக்க வேண்டும். மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களை பாரபட்சமாக நடத்திக் கொண்டு எப்படி நாம் நாகரீக சமுதாயம் என்று கூறமுடியும். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர விழிப்புணர்வு தேவை. கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
உயிர் காக்கும் மருத்துவத்தை இதுபோன்ற ஈன செயலுக்கு பயன்படுத்து கூடாது. விழிப்புணர்வு பிரசாரத்திற்கு நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள பஞ்சாயத்து உறுப்பினர்களை சுகாதார அமைச்சகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள் மீதாத வன்முறைக்கும் மனநிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத தலைவர்கள் இதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். மற்று துறையினரும் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்றார்.
மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி ஆகியோரும் பேசினர்.












Click it and Unblock the Notifications