கணவன் எரித்துக் கொலை-கள்ளக் காதலனுடன் மனைவி கைது
பொள்ளாச்சி: கள்ளக்காதலை கண்டித்த கணவனை எரித்து கொலை செய்த மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூலக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கவேல் (34), மனோன்மணி (32) தம்பதி. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
தென்னை ஓலை தொழிலாளிகளான இருவரும் ஜமீன்காளியாபுரத்தில் ஓலை பின்னும் வேலை செய்தனர். அங்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓய்வு அறை உள்ளது.
இந்நிலையில் தங்கவேல் மர்மமான முறையில் தீயில் கருகி இறந்து கிடந்தார். மனோன்மணியும் அவரோடு வேலை செய்யும் செந்தில் என்பவரும் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றனர்.
போலீசார் அவர்களை விசாரித்தபோது கணவர் தங்கவேல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்றபோது இருவரும் காயமடைந்தோம் என்று மனோன்மணி கூறினார். சந்தேகமடைந்த போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சி டி.எஸ்.பி. தங்கதுரை மற்றும் வடக்கிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இருவரிடமும் நடத்திய விசாரணையில் தங்கவேல் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
செந்திலுக்கும் மனோன்மணிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதை தங்கவேல் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மனோன்மணியும் செந்திலும் தொழிலாளர் ஓய்வு கூடத்தில் உல்லாசமாக இருந்தனர்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த தங்கவேலு இருவரையும் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தங்கவேல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தனர். வலியால் அலறித்துடித்த தங்கவேல், மனோன்மணியையும் செந்திலையும் கட்டிப்பிடிக்க ஓடினார். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த இருவரும் அருகில் இருந்த ஓலைகளை தங்கவேல் மீது போட்டு எரித்தனர். இதில் தங்கவேல் கருகி இறந்தார் என்பது தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தீக்காயம் அடைந்த மனோன்மணி கோவை அரசு மருத்துவமனையிலும், செந்தில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.