கேரளாவில் பரிதாபம்-யானை மிதித்து 10 மாத குழந்தை பலி
திருவனந்தபுரம்: பத்து மாத பெண் குழந்தையை யானை மிதித்து கொன்றது. படுகாயமடைந்த தாய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கேரள மாநிலம் மலப்புரம் அருகை முண்டேரி பகுதியைச் சேர்ந்தவர் லாலு. இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. இவர்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சு குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த யானைகள் வீட்டை சூறையாடியது. வீட்டுக்குள் புகுந்த ஒரு யானை மஞ்சுவையும் குழந்தையையும் மிதித்தது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் யானைகளை விரட்டியடித்தனர். படுகாயமடைந்த மஞ்சுவை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை வனப் பகுதியிலும்...
இதேபோல கோவை மாவட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள சின்னதடாகம் மலை கோயிலில் 2 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த யானைகளை விரட்ட முயன்றனர். ஆத்திரமடைந்த யானைகள் இருவரையும் விரட்டின. இதில் ஒருவரை யானைகள் மிதித்துக் கொன்றன.