விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு
இது தொடர்பாக நளினியின் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்
கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறேன். எனது தண்டனை காலம் 14 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு சிறைத் துறை ஆலோசனை கமிட்டி முன்பு என்னை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்தேன்.
இந்த மனுவை பரிசீலித்த ஆலோசனை கமிட்டி விடுதலை செய்ய முடியாது என கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தள்ளுபடி செய்தது. மேலும், என்னை விடுதலை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்தது.
எனது நன்னடத்தையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், என்னை விடுதலை செய்யக்கூடாது என்று சிறைத்துறை ஆலோசனை கமிட்டி பரிந்துரைத்த ஆலோசனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மாலை நீதிபதி ஜோதிமணி முன்பு பரிசீலனைக்கு வருகிறது.
நளினி கடந்த 17 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.