போலீஸ் முன் மிஸஸ் இந்தியா சிமி-ஜார்ஜ் மோதல்!
சென்னை: மோசடிப் புகாரில் சிக்கிய மிஸஸ் இந்தியா சிமி குமாரும், அவர் மீது புகார் கூறிய தொழிலதிபர் சுகுமார் ஜார்ஜும், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காரசாரமாக வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சுகுமார் ஜார்ஜ். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். பெரும் பணக்காரர். மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். மகனும், மகளும் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர்.
மிஸஸ் இந்தியா போட்டியில் வென்ற சிமியை ஹைதராபாத்தில் சந்தித்த சுகுமார் ஜார்ஜ் அவர் மீது காதல் கொண்டு ரகசியக் கல்யாணம் செய்து கொண்டார். சிமி கல்யாணமாகி 15 வயதில் மகள் உள்ளார்.
இந் நிலையில் சமீபத்தில் சிமி மீது சரமாரியாக புகார்கள் கிளம்பின. பெரும் பணக்காரர்களை மயக்கி, கல்யாணம் செய்து கொண்டு பின்னர் பெரும் பணத்தைக் கறந்து கொண்டு தப்பி விடுவதாக அவர் மீது புகார் வந்தது. மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
இந் நிலையில் சுகுமார் ஜார்ஜும், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தன்னிடம் சிமி பண மோசடி செய்துவிட்டதாக புகார் தந்தார்.
இதையடுத்து சிமியை போலீஸார் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தினமும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்துப் போட்டு வருகிறார்.
இந் நிலையில் சுகுமார் ஜார்ஜ் ஆணையர் நாஞ்சில் குமரனை சந்தித்து மறுபடியும் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னைக் கூலிப்படையை வைத்து சிமி மிரட்டுவதாகவும், ரூ. 1 கோடி பணம் தராவிட்டால் தீர்த்துக் கட்டி விடுவேன் என மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். அதன் பேரில் துணை ஆணையர் விஜயகுமாரி மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் செல்வராஜ், விமலா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
ஜார்ஜையும், கையெழுத்துப் போட வந்த சிமியையும் ஒன்றாக உட்கார வைத்து விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் விசாரணை நடந்தது.
அப்போது ஜார்ஜ் கூறுகையில், எங்களுடைய விவகாரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. என்னிடம் சிமிகுமார் ஒரு கோடி ரூபாய் கேட்கிறார். திருமணத்திற்குப் பிறகு அவளுடன் வாழவில்லை. இருந்தாலும் சிமிக்கு 10 லட்சம் ரூபாய் தர ஒப்புக் கொண்டேன்.
போனில் யாரோ சிலர் என்னை மிரட்டி பணம் கேட்கின்றனர். சிமிகுமார் மீது போலீசில் புகார் கொடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற எண்ணம், அவர் பிரிந்து சென்ற போதும் இல்லை. இப்போதும் இல்லை. சிமிகுமார் என்னை புரிந்து கொண்டாலே போதும் என்றார்.
ஆனால் சிமியோ, நான் அவரைக் கல்யாணம் செய்து கொண்டு ஒன்றரை வருடம் வாழ்ந்துள்ளேன். எனவே அவரது சொத்தில் எனக்கு உரிமை உள்ளது. அவர் எனக்கு ரூ. 1 கோடி தர வேண்டும். அவர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்குப் போட்டுள்ளேன் என்றார்.
அவர் கூறுகையில், எனது கணவர் சுகுமார் ஜார்ஜ், என் மீது சுமத்தியுள்ள வழக்குகளை சென்னையில் தங்கி தைரியமாக எதிர் கொண்டு வருகிறேன். என்னுடன் தங்கியிருப்பவர்கள் எனது நண்பர்கள். எனது வழக்கிற்கு உதவி செய்கிறவர்கள். அவர்கள் மீது சுகுமார் ஜார்ஜ் சந்தேகப்படுகிறார்.
கோர்ட் வழக்கை நியாயமான முறையில் சந்திக்கவே சென்னை வந்துள்ளேன். விபசாரத்தில் ஈடுபடும் மோசமான பெண் நான் இல்லை. மத்திய குற்றப்பிரிவு போலீசார், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர தயாராக உள்ளேன் என்றார்.
ஒரு கட்டத்தில் இருவரும் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். வந்தது முதலே இருவரும் முறைத்தபடி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் துணை ஆணையர் விஜயக்குமாரி அமைதிப்படுத்தினார்.
பின்னர் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் இருவரும் கோர்ட் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும். அமைதி காக்க வேண்டும். கோர்ட் எவ்வளவு பணம் தரச் சொல்கிறதோ அதை ஜார்ஜ் தர வேண்டும். அதற்கு முன்பாக ரூ. 1 கோடி தர வேண்டும் என சிமி மிரட்டக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்.
அதை இருவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் கோர்ட் உத்தரவுப்படி நடந்து கொள்வதாகவும், இடையில் பிரச்சினை செய்ய மாட்டோம் என்றும் எழுதி கொடுத்து விட்டுச் சென்றனர்.
இதற்கிடையே, சிமி மீதான விபச்சாரப் புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று விஜயக்குமாரி கூறியுள்ளார்.