இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் கொலை - இந்தியர்கள் போராட்டம்

சம்பந்தப்பட்ட மாணவருக்கு வயது 23. அவர் ஆஸ்திரேலியாவில் படித்து வந்தார். கூடவே பகுதி நேர டாக்சி டிரைவராகவும் பணியாற்றி வந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு, மெல்போர்ன், கிளிப்டன் ஹில்ஸ் பகுதியில் சாலையோரம் அவர் கத்திக் குத்துக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியிருந்தனர். ரத்த வெள்ளத்தில் அவர் மிதந்து கிடந்தார்.
அவர் ஓட்டி வந்த கார் சற்று தொலைவில் தாக்கி சேதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கத்திக் குத்துப்பட்டு கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவர் சாலையில் கிடந்துள்ளார்.
அதன் பின்னர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்து அவர்கள் விரைந்து வந்து மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடலிலிருந்து பெருமளவில் ரத்தம் வெளியேறி விட்டதால் அந்த இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட இந்திய மாணவரின், பெயர் விவரங்களை விக்டோரியா போலீஸார் வெளியிடப்படவில்லை.
டாக்சியில் பயணித்தவர்கள் வாடகையைக் கொடுக்காமல் சென்றிருக்கலாம், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாணவரை அவர்கள் கத்தியால் குத்திக் கொன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மெல்போர்னில் இந்தியர்கள் போராட்டம்
இந்திய மாணவர் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்னில் இந்திய மாணவர்கள், இந்திய டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேல் சட்டை அணியாமல் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மெல்போர்ன் நகரில் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விக்டோரியா மாகாண டாக்சி டிரைவர்கள் சங்கத் தலைவர் பிரீத்தம் சிங் கில் தலைமையில் 200க்கும் மேற்பட்ட டிரைவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கில் கூறுகையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்திய டாக்சி டிரைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
எங்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என அரசு உறுதி அளித்தது. ஆனால் இதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.
இன்னொரு டாக்சி டிரைவரான ஹர்ப்ரீத் சிங் கூறுகையில், இங்குள்ள பல டாக்சி டிரைவர்கள் இந்தியர்கள்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். படிப்புச் செலவுக்காக பகுதி நேர டாக்சி டிரைவர்களாகப் பணியாற்றுகின்றனர். இப்படிப்பட்ட மாணவர்களை குறி வைத்துக் கொல்வது மிகவும் கொடுமையானது என்றார்.
நூற்றுக்கணக்கான டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், குண்டுக்கட்டாக தூக்கியும் அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே இந்திய மாணவரைக் கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரது அடையாளம் தெரிய வந்துள்ளது. அவரது பெயர் பாரிஷ் சார்ல்ஸ். 45 வயது. இவரது புகைப்படத்தையும், வீடியோ படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications