யுபிஎஸ்சி தேர்வுகள்-தமிழில் எழுத தடை போட 'சக்திகள்' முயற்சி
டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத தடை விதிக்க சில 'டெல்லி சக்திகள்' முயன்று வருகின்றன. இதற்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐஆர்எஸ் மற்றும் இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.
இந்தத் தேர்வுகளை இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் எழுத இப்போது வழியுள்ளது.
ஆனால், திடீரென இப்போது இந்தத் தேர்வுகளை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற புதிய விதியைக் கொண்டு வர சில வட நாட்டு சக்திகள் முயன்று வருகின்றன.
மக்களவையில் பேசிய உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வால், போஜ்புரி மற்றும் ராஜஸ்தானி மொழிகளை எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுகளை பல்வேறு மாநில மொழிகளில் நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது. இதனால், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் தேர்வுகளை நடத்தலாமா என்று யு.பி.எஸ்.சி. பரிசீலித்து வருவதாக குண்டைப் போட்டார்.
இதற்கு தென் மாநில எம்பிக்களிடம் கடும் எதி்ர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் தமிழக காங்கிரஸ் எம்பி கார்வேந்தன் தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.
அதில், மத்திய உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வாலின் பேச்சு காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் எழுத முடியாத சூழ்நிலை வரும். இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் தேர்வு எழுத முடியும் என்ற நிலை வருமானால், கிராமப் பகுதி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளை சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இருந்து நீக்கம் செய்தால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களின் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவ்வாறு செய்தால் அது மிகப்பெரிய அநீதியாகும்.
எனவே, எட்டாவது அட்டவணை மொழிகளை சிவில் சர்வீஸ் தேர்வு திட்டத்திலிருந்து நீக்க நினைக்கும் அதிகாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications