தர்மபுரியில் மருத்துவ கல்லூரி-கவுன்சில் இன்று ஆய்வு
தர்மபுரி: தர்மபுரியில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரியையொட்டி, அங்குள்ள அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ கவுன்சில் குழு இன்று ஆய்வு நடத்தியது.
தர்மபுரியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அங்கு மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு அமைக்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து தற்போதுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டன. வகுப்பறைக் கட்டடங்கள், நிர்வாக அலுவலகங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. குடியிருப்புகள் உள்ளிட்டவையும் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கோரி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வுக் குழு ஒன்றை தர்மபுரிக்கு அனுப்பியது.
அக்குழு இன்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தது. இக்குழுவில் கவுன்சிலின் முழு நேர அதிகாரி டாக்டர் அனுப்ராஜ், பெங்களூர் தடயவியல் துறை அதிகாரி தேவதாஸ், ஹைதராபாத் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஷீலா மதன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றை இக்குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.
இக்குழு அளிக்கும் ஆய்வறிக்கையை பொறுத்து இந்திய மருத்துவக் கவுன்சில், தர்மபுரி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும்.












Click it and Unblock the Notifications