கார்டோசாட்-2ஏ, ஐஎம்எஸ் செயற்கைக் கோள்கள் படம் அனுப்பத் தொடங்கின
சென்னை: இந்தியா அனுப்பியுள்ள கார்டோசாட்-2ஏ மற்றும் ஐஎம்எஸ்1 ஆகிய இரு செயற்கைக் கோள்களும் சிறப்பாக செயல்படுவதாகவும், ஐஎம்எஸ்-1லிருந்து முதல் படம் வந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 28ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி-சி9 மூலம் பத்து செயற்கைக் கோள்களை ஏவி இஸ்ரோ வரலாறு படைத்தது. அதில் கார்டோசாட்-2ஏ மற்றும் ஐஎம்எஸ்-1 ஆகிய இரு செயற்கைக் கோள்கள் இந்தியாவுக்குச் சொந்தமானவை. மற்றவை வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் ஆகும்.
இந்தியாவின் இரு செயற்கைக் கோள்களும் சிறப்பாக செயல்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரு செயற்கைக் கோள்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
ஐஎம்எஸ்-1 செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ள மல்ட்டி ஸ்பெக்டரல் கேமரா நேற்று முடுக்கி வைக்கப்பட்டது. அலகாபாத் முதல் ராமேஸ்வரம் வரையிலான பகுதியை அது படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் படம் மிகத் தெளிவாக உள்ளது.
இன்று ஐஎம்எஸ்-1ல் உள்ள ஹைபர் ஸ்பெக்டர் இமேஜிங் கேமராவும், கார்டோசாட்-2ஏவில் உள்ள பான்குரோமேட்டிக் கேமராவும் முடுக்கி விடப்பட்ன.
இந்தக் கேமராக்கள் மூலம் உத்தரகான்ட் முதல் கர்நாடகம் வரையிலான பகுதி படம் பிடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்கள் அனைத்தும் ஹைதராபாத், ஷாத் நகரில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சிக்கு வந்து சேர்ந்துள்ளன. அத்தனை படங்களும் மிகத் தெளிவாக, துல்லியமாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications